வவுனியா வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக நெடுங்கேணி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும் என ஆலய நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டுள்ளது.
புதருக்குள் வீசப்பட்ட லிங்கம்
இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
தொல்லியல் திணைக்களம் மீதே சந்தேகம் ஏற்பட்டுவதாக தெரிவித்து இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் து. தமிழ்செல்வன்,
“இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்று வந்தன.
எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவுசெய்திருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
அத்துடன் விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்று காலை நெடுங்கேணி காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.