சிறிலங்கா அரசாங்கம் பாடசாலை மாணவர்களை நன்றாக பழிதீர்த்து விட்டார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் தொடர்ச்சியான மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை உயர்தரப் பரீட்சை முடிவுற்ற அன்றைய தினமே தடையின்றிய மின்சாரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாடசாலை மாணவர்களை ரணில் எப்படிப் பழிவாங்கினார் என்பது தெளிவாகத் தெரிகின்றது எனவும் அநுரகுமாரா தெரிவித்துள்ளார்.
பெற்றோருக்காக பழிவாங்கப்பட்ட மாணவர்கள்
மேலும் பரீட்சை நடைபெற்ற காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வெட்டு, உங்களது அம்மாமார், அப்பாமார் என்னை விரட்டினார்கள். அந்தத் துன்பத்தை நீங்கள் (பாடசாலை மாணவர்கள்) அனுபவியுங்கள் என்பது தான், ரணிலின் தந்திர செயற்பாடு.
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்கவின் சதித் திட்டம், மக்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்பதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் போதே மின்வெட்டை நிறுத்துமாறு மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசாங்கம் மறுத்துவிட்டது.
பதவி ரணிலின் பரம்பரை சொத்தல்ல
பின்னர் பெப்ரவரி 16 ஆம் திகதி மின் கட்டணத்தை அதிகரித்து, 17ஆம் திகதி முதல் தடையின்றிய மின்சாரத்தை வழங்கினர். பெப்ரவரி 17 ஆம் திகதி தான் உயர்தரப் பரீட்சையும் முடிவடைந்தது. இதனூடாகவும் மக்களை ரணில் பழிவாங்கினார்.
சிறிலங்கா அதிபர் பதவி என்பது ரணிலுக்குப் பரம்பரை பரம்பரையாக உரித்தான சொத்து என்று அவர்
நினைக்கின்றார். அது மக்களின் ஆணையின் ஊடாகக் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இல்லை.
1977 இல் இருந்து 2020 வரை மக்கள் அவருக்கு அரசியல் ஆணை வழங்கினர். அதன் பின் மக்கள் அவரை விரட்டினர். அவரை மக்கள் இவ்வாறு விரட்டுவார்கள் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.
பழிதீர்க்கப்படும் மக்கள்
இதனால் அவருக்கு மக்கள் மீது குறிப்பாக கொழும்பு மக்கள் மீது கடும் கோபம் உண்டு.
அந்தக் கோபத்தை அவர் பல வழிகளில் தற்போது வெளிக்காட்டி வருகின்றார். சம்பளத்தில் அரைவாசியை அரசு வரி என்ற பெயரில் பறித்துக்கொள்கின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் இவ்வாறான செயற்பாடுகள் மூலமே மக்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டும் என்பதே ரணிலின் சதித் திட்டம் என்பது தெள்ளத்தெளிவாகவே புலப்படுகிறது எனவும் அநுரகுமார பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.