அமெரிக்கா தன்னுடைய எதிர்கால நடவடிக்கைக்காக இலங்கையின் இராணுவ நடவடிக்கையை தனது கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவை பொருத்தவரை இலங்கை அரசியலையும், படையினரையும் வசப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.
கட்டுப்பாட்டுக்குள் இந்தியா
தற்போது இலங்கை முழுமையாக அமெரிக்காவின் பக்கம் வந்துள்ளதுடன், பக்கத்து நாடான இந்தியாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது மியன்மாரில் கற்றுக்கொண்ட பாடத்தினை மீண்டும் இலங்கையில் அமெரிக்கா கற்க கூடாது என்பதற்காக இவ்வாறு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய இராணுவத்தினரை விட அதிகளவிலான இராணுவத்தினரை இலங்கை கொண்டுள்ளமைனால் அவர்கள் போர் இல்லாத போதும் கூட பேரம் பேசும் சக்திகளாக உள்ளனர். இதன் காரணமாகவே 2010 ஆம் ஆண்டு சரத்பொன்சேகாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தில் அதிக, விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்ற நாடு அமெரிக்கா தான் எனவும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் மற்றும் 75 யுத்த விமானங்கள் 5000இற்கும் அதிகமான ஆயுதம் தரித்த அமெரிக்க படையினர் அந்த கப்பலில் தரித்திருக்கும் சூழ்நிலை இருக்கும் என கூறப்படுகிறது.
அப்படியானதொரு கட்டமைப்பிலா மிதக்கும் இராணுவத்தளம் இருக்கப் போகிறது என கேள்விக்கு பதிலளிக்கும் போது,
உண்மை தான். அமெரிக்காவில் ஏறத்தாழ 10 விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்றன. உலகத்தில் அதிக விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கின்ற நாடு அமெரிக்கா தான். USS ஜெரால்ட் R4இன் எடை ஏறத்தாழ ஒரு இலட்சம் தொன்.
அது மிகப்பெரிய கப்பல். பெருமளவான தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்கக்கூடிய ஒரு கப்பல்.
அந்த ஒரு கப்பல் வந்து நிற்குமாக இருந்தாலே இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. அதற்கான ஒரு ஏது நிலையை தான் இந்த ஏசிஎஸ்ஏ வழங்கியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு உடன்பாடு
அத்துடன், போரை பயன்படுத்தி 2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் ஊடாக உடன்பாடொன்று எட்டப்பட்ட நிலையில், அது அமெரிக்காவிற்கு கிடைத்த முதலாவது வெற்றி என்பதுடன் இந்தியாவிற்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.