அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த போதிலும், இந்த நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று(25) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாட்டின் நிறைவேற்று அதிபர் கூட குறித்த நியமனத்தை மேற்கொள்ளுமாறு பணிப்புரை பிறப்பித்தும், அதிபரின் பணிப்புரையைக் கூட தெரிவுக் குழு புறக்கணித்துள்ளதுடன், இதுவரை குறித்த நியமனம் மேற்கொள்ளப்படவில்லை.
அதிபரின் பணிப்புரை
அதிபரின் பணிப்புரையைக் கூட புறக்கணித்து தற்காலிக தலைவர்களை நியமித்து அரசாங்கம் ஆடும் இந்த ஆட்டத்தை புரிந்து கொள்ள முடியாதுள்ளது. எனவே இந்த நியமனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினை பல வாரங்களாக தீர்க்கப்படாதுள்ளது.
காலம் தாழ்த்தி காலம் தாழ்த்தி அநீதியான முறையில் சில செயற்பாடுகள் இடம்பெறுகிறது.
தற்காலிக தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அரசாங்க நிதி தொடர்பான தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க ஆளும் தரப்பு விருப்பம் கொள்வதாக அதிபர் தெரிவித்திருந்தார்.
தெரிவுக் குழு கூடும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்டவரின் பணிப்புரை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தாலும் அது அவ்வாறு நிறைவேற்றப்படவில்லை.
வரேனும் ஒருவர் நல்ல விடயங்களை முன்னெடுக்கும் போது அவரது செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்காமையாலையே நாடு இவ்வாறு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
ஏதேனும் பிரச்சினை உள்ளதா?
நீங்களும் செய்வதில்லை – செய்பவரையும் விடுவதில்லை
அதிபரின் பணிப்புரையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா?
ஹர்ஷவை நியமிப்பதில் ஆளும் தரப்புக்குள்ள வருத்தம் யாது?
கபீர் ஹாசிம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை நியமிக்குமாறு அதிபர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சுசில் பிரேமஜயந்தவிற்கும் பணிப்புரை விடுத்தாரல்லவா?
அவ்வாறெனில் ஏன் அதை உங்களால் மேற்கொள்ள முடியாதுள்ளதாக” சபையில் கேள்வி எழுப்பினார்.