பல அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவிலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூடப்படுவதற்கான காரணம்
செலவுகளை குறைத்து முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் போன்றவற்றிற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் போது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிறுவனங்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.