யாழ் – புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்றைய தினம் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்றைய தினம் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை
முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் அமர்வு, மேன்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதான குற்றவாளியான “சுவிஸ் குமார்” உட்படத் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
சட்டத்தை மீறி தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், தம்மை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தமது மேன்முறையீட்டில் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதான உயர்தர மாணவியான சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு
இந்த நிலையில் வித்தியாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்தி படுகொலை செய்தமை தொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், வழக்கின் பிரதான சந்தேக நபர் சுவிஸ்குமார் உள்ளிட்ட 07 பேருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் எனவும் யாழ். மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
மரண தண்டனைக்கு மேலதிகமாக, சந்தேக நபர்களுக்கு மேலும் 30 வருடச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகப் பிரதிநிதிகள் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.