எல்பிட்டிய – எத்கந்துர பிரதேசத்தில் விவசாய நிலம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டு பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞரின் சடலம் எல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சந்த குமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையில் முறைப்பாடு
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால், அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பன் எனக் கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் தலைமறைவு
இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற காவல்துறையினர், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.