மக்கள் ஆதரவு மூலமே மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும்.
பிரதமர் பதவி ஆசை
ஆனால், அவ்வாறான எந்தவொரு முயற்சியும் தற்போது இடம்பெறவில்லை. தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார்.
அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அதிபர், பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். மக்கள் ஆதரவு மூலமே மகிந்தவைப் பிரதமராக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.