உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது என்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதி செய்வதே நடைமுறையாகும் என இலங்கை அரச தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேரர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
பேச்சு சுதந்திரம்
மேலும், நாட்டின் சட்டக் கட்டுப்பாடுகளுக்குள் மக்கள் பேச்சு சுதந்திரம் பெற வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இயல்புநிலையையும் அமைதியையும் மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தேரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அனைத்து தரப்புகளும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாக மகாநாயகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.