யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் பிரதான தபாலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிலை பிரதிஷ்டை
குறித்த சுற்று வட்டத்தினை மீளமைத்து அழகுபடுத்தப்பட்டு சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் கடந்த வருடம் மே மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திருவள்ளுவரின் சிலை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகனால் தீரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இந்திய துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர்களான இ.ஆனல்ட் மற்றும் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மத குருமர்கள், பேராசிரியர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்.வணிகர் கழகத்தினர், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த அபிவிருத்திச் செயற்றிட்டம் ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திலகராஜின் நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.