மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் காவல்துறையினர் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்தனர்.
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த இருவரை கைது செய்திருந்தனர்.
மயானத்தில் மறைத்து வைக்கப்பட்ட வாள்கள்
இந்நிலையில் குறித்த இருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றில் வாளினை தயாரித்த அதன் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை கைப்பற்றியிருந்தனர்.
வாள் தயாரிக்க உதவியவரும் கைது
இதேவேளை கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் இட்ட ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.