சிலாபம் இரணைவில வீதியில் பயணித்த உந்துருளி ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் மெதவத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் அவரது இரண்டு பிள்ளைகளும் அவரது கணவரும் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்தை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
உயிரிழந்த பெண் தனது 10 மற்றும் 13 வயதுடைய இரண்டு பிள்ளைகளுடன் இரணவில கடற்கரை வீதியிலிருந்து சிலாபம் நோக்கி தனது கணவர் ஓட்டிச் சென்ற உந்துருளியில் பயணித்த போது உந்துருளியின் பின் சக்கரம் திடீரென வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பிள்ளைகளும் கணவனும் வீதியை விட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில் பெண் நடு வீதியில் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் தலைமையக காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நடு வீதியில் தூக்கி வீசப்பட்ட பெண் பின்னால் வந்த சிறிய ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.