வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, சிதம்பரபுரம்- அருள்மிகு ஈழத்து பழனி முருகன் திருக்கோயில்
அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் ஐயனே வேல்முருகா
ஆறுதலைத் தந்தெம்மை வாழவைக்க வந்திடைய்யா
நிம்மதியை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும்
சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா
வேல்தாங்கி நின்றிருந்து அருளுகின்ற ஐயனே வேல்முருகா
வேதனைகள் போக்கியெம்மை வாழவைக்க வந்திடைய்யா
வெற்றியையே நாடிநிற்கும் எங்களுக்கு என்றும்
சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா
குன்றின் மேல் கோயில் கொண்டு காட்சி தரும் ஐயனே வேல்முருகா
குவலயத்தில் பெருமையுடன் வாழவைக்க வந்திடைய்யா
கேடில்லா நல்வாழ்வை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும்
சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா
தமிழ்த் தாயின் காவலனாய்த் துலங்குகின்ற ஐயனே வேல்முருகா
தளர்வில்லா மனவுறுதி தந்தெம்மை வாழவைக்க வந்திடைய்யா
திறமைமிகு நல்வாழ்வை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும்
சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா
நம்பித் தொழும் அடியார் நலன் காக்கும் ஐயனே வேல்முருகா
நித்திய அமைதி தந்து நிம்மதியாய் வாழ வைக்க வந்திடைய்யா
நொந்து மனம் வாடாத நல்வாழ்வை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும்
சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா
சூரனை அடக்கியருள் தந்தவனே ஐயனே வேல்முருகா
சூழ்ச்சிகளைச் சிதறடித்து நிம்மதியாய் வாழவைக்க வந்திடைய்யா
சீரான வளவாழ்வை நாடிநிற்கும் எங்களுக்கு என்றும்
சிதம்பர புரத்திலுறை பழனி முருகா அருளிடைய்யா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
The post வவுனியா, சிதம்பரபுரம் – அருள்மிகு ஈழத்து பழனி முருகன் திருக்கோயில் appeared first on Malayagam.lk.