Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகு மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்பிரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் ஜெகதாபட்டணம் மற்றும் நாகபட்டணத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்திய மீனவர்கள் 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் 25 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.