Colombo (News 1st) உயர் தரத்தில் சித்தியடைந்த, அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபா கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை தவிர, மாணவர்களின் நாளாந்த செலவுக்காக மேலும் 3 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
நாட்டில் கடன் வட்டி 25 வீதத்தை தாண்டியுள்ள நிலையில், வட்டியின்றி குறித்த கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக 5,000 மாணவர்களுக்கு இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
தற்போது இலங்கை வங்கியினால் மாத்திரம் வழங்கப்படும் இந்த கடன் வசதி எதிர்காலத்தில் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியினாலும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இக்கடன் வழங்கலில் உயர் தர Z-புள்ளி, எதிர்பார்க்கப்படும் பாடநெறியின் காலத்திற்கு பொருத்தமான மதிப்பு ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.